ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் லாரியை வேகமாக ஓட்டி வந்து மோதி நிகழ்த்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பயங்கரவாதத் தாக்குதல் என்று பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வென் கூறினார்.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஸ்வீடன் வானொலி வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது: தலைநகரில் வேகமாக லாரியை ஓட்டி வந்த நபர் பிரபல பல்பொருள் அங்காடிக்குள் மோதினார். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லாரியை கடத்தி வந்து இந்தத் தாக்குதலை நிகழ்த்தியாகத் தெரிகிறது என்று ஸ்வீடன் வானொலி தெரிவித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அங்கிருந்தவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த ரயில் நிலைய பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். அந்த பகுதியில் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சுரங்க நடைபாதைகளும் மூடப்பட்டன.
இதுகுறித்து ஸ்வீடனின் மேற்கு பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஸ்டிபான் லோபன் கூறுகையில், ‘‘ஸ்வீடன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது பயங்கரவாதிகள் கைவரிசை என்பதை அனைத்து தகவல்களும் உறுதி செய்கின்றன’’ என்றார். பின்னர், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் உடனடியாக தலைநகர் திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போதுவரை 2 பேரை கைது செய்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். தாக்குதலையடுத்து ஸ்வீடன் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய இடங்களில் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து பொதுமக்கள் மீது மோதி தாக்குதல் நிகழ்த்தியதைத் தொடர்ந்து ஸ்வீடனிலும் அதுபோன்ற தாக்குதல் தற்போது நடைபெற்றுள்ளது.
மோடி கண்டனம்: இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். பதிவில், தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும், இந்தத் துயரமான நேரத்தில் ஸ்வீடனுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.