சிரியாவில் பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்ததாவது:
நஸீப் எல்லையருகே உள்ள ஜெய்ஷ் அல்} இஸ்லாம் கிளர்ச்சியாளர்கள் முகாமுக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த பயங்கரவாதி, தனது உடலில் பொருத்தியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தினார். இதில், அந்த அமைப்பைச் சேர்ந்த 23 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர மேலும் பலர் பலத்த காயமடைந்ததாக சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு, இதுவரை எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இஸ்லாமிய தேச குழுவினருடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் சிரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். இதனால், இந்த தற்கொலைத் தாக்குதலிலும் அவர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.