நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து நேபாள உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
நேபாளத்தில் கடந்த சில நாள்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், சன்சாரி மாவட்டத்தில் 7 பேரும், சிந்துலியில் 8 பேரும், ஜப்பா மாவட்டத்தில் நான்கு பேரும் உயிரிழந்தனர்.
பேங்கி, மூரங் மற்றும் பஞ்ச்தார் மாவட்டங்களில் தலா 3 பேரும், இதர மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.
மூரங் மாவட்டத்தில் உள்ள சுந்தர் ஹைரய்ன்ஸா பகுதியில் வசித்த முதியவர்கள் மூன்று பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளதையடுத்து பலர் உடைமைகளை இழந்து நிற்கதியாகியுள்ளனர்.
வெள்ள நீர் புகுந்ததையடுத்து பிராட்நகர் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. வெள்ள மீட்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக ராணுவம், போலீஸ் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.