இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின்கீழ் இந்தியர்கள் 3 பேரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நின்டாவூர் எனுமிடத்தில் இந்தியர்கள் சிலர் சட்டவிரோதமாக வந்து தங்கியிருப்பதாக இலங்கை கடற்படை மற்றும் மருதமுனை காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள விவசாய இடத்தில் 3 பேர், விவசாயம் செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 3 பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், சட்டவிரோதமாக அங்கு 3 பேரும் தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டு, சம்மன்துறை காவல்துறையிடம் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
3 பேரின் பெயர்கள் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 27,36, 41 வயதை உடைய நபர்கள் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.