வங்கதேசத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
வங்கதேசத்தில் பெய்த கனமழையால் வடமேற்குப் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின. ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இம்மாத கடைசியில் அதிக அளவு மழைப்பொழிவு இருக்குமானால் 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் பட்சத்தில் வங்கதேசத்தில் நீர் மட்டம் மேலும் உயரும் என வெள்ள மதிப்பீடு மற்றும் வானிலை எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை தொடர வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறையின் தலைமை இயக்குநர் ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கின் காரணமாக, குரிகிராமில் 60,000 குடும்பங்களும், நில்பமாரியில் 400 குடும்பங்களும் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகியுள்ளனர். இரண்டு நாள்களாக பல பகுதிகளில் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. பிரம்மபுத்ரா நதியில் நீர்மட்டம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. இதனால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வங்கதேச அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 1998-ஆம் ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கு காரணமாக வங்கதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 68 சதவீதம் நீரில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.