ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிகழ்த்திய தாக்குதலில் 5 காவலர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஆப்கனின் ஹெல்மண்ட் மாகாணம் நாவா மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நிகழ்த்தினர். இதில், பணியிலிருந்த 5 காவலர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து காவல் துறையினர் தாக்குதல் நிகழ்த்தினர். இந்த தாக்குதல் சனிக்கிழமை காலை வரை தொடர்ந்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் கோரி யூசுப் அகமதி அறிவித்தார்.
உருஸ்கன் மாகாணத்தின் தலைநகர் தரின்கோட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியை குறிவைத்து தலிபான்கள் நிகழ்த்திய மற்றொரு தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் நிகழ்த்திய பதில் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தோஸ்த் முகமது நயப் தெரிவித்தார்.