பிஜி தீவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: பிஜி தீவில் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு (உள்ளூர் நேரம்) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 538 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிஜி தலைநகர் சுவாவிலிருந்து 287 கி.மீ. தொலைவிலுள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடுக்கப்படவில்லை. உயிர்சேதம், பொருள் சேதம் குறித்த தகவல் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. பூமித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும்போது நில அதிர்வுகள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.