அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத பெரும் புயல் வெள்ளிக்கிழமை தாக்கியது. மணிக்கு சுமார் 215 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
ஹார்வே புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் டெக்ஸாஸ் மாகாணத்தின் துறைமுகப் பகுதியில் கடந்தது. அப்போது அங்கு பல பகுதிகளை துவம்சம் செய்தது. மரம், வீடு, வாகனம் உள்ளிட்டவை கடும் சேதமடைந்தன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்த பாதிப்பில் சிக்கி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி சேதமடைந்தவற்றை சீர்செய்யும் முயற்சியில் அமெரிக்காவின் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.
ஹார்வே புயல் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டனர். இதனால் பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
இந்நிலையில், உச்சகட்டமான 4-ஆம் நிலையுடன் தாக்கிய ஹார்வே புயல் தற்போது வலுவிழந்து 3-ஆம் நிலைக்கு இறங்கியுள்ளதாக அமெரிக்க வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதன்கிழமை வரை கடும் மழை தொடரும் என்றும் மழையின் அளவு 127 சென்டி மீட்டர் இருக்க வாய்ப்புள்ளதாக அறிவித்தது.
தற்போது தொடங்கி பெய்து வரும் இந்த பலத்த மழை காரணமாக இதுவரை அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்திலும் 1 மீட்டர் அளவுக்கு வெள்ளநீர் சுழ்ந்துள்ளது.
இந்த ஹார்வே புயல் பாதிப்பு காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விமான சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. சுமார் 3,000-க்கும் மேலான விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மற்றப் பகுதிகளுக்குச் செல்வதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புயல் பாதித்த பகுதிகளை செவ்வாய்கிழமை பார்வையிடுகிறார். இதுகுறித்து அதிபரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
ஹார்வே சூறாவளி மற்றும் புயல் பாதிப்புகளை பார்வையிட டெக்ஸாஸ் மாகாணத்தை விரைவில் பார்வையிடவுள்ளேன். அதில் எவ்வித தடைகளும் ஏற்படாமல் இருக்க ஏற்பாடு செய்து வருகிறேன். பாதுகாப்பு தான் எனது முதல் நோக்கம். டெக்ஸாஸ் மக்களுக்கு அனைவரும் உதவ முன்வர வேண்டும். இதில் எவ்வித பாகுபாடுகளும் கூடாது. டெக்ஸாஸ் மாகாணத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்க அரசாங்கம் நிச்சயம் செய்யும் என்றார்.