பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக இருவரை பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த ஊடகம் தெரிவித்துள்ளதாவது:
லண்டனின் டெளனிங் தெருவிலுள்ள பிரதமர் தெரசா மே-வின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வாயிலில், அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தவும், அதனைத் தொடர்ந்து கத்தியைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தவும் சதித் திட்டம் தீட்டியதாக இரண்டு நபர்களை பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கடந்த வாரம் கைது செய்தனர்.
பிரிட்டனின் உளவு அமைப்பான எம்ஐ5-யின் உதவியுடன் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் லண்டன் மற்றும் பர்மிங்ஹம் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் இல்லத்தில் கைப்பையைப் போன்ற வெடிகுண்டைப் பயன்படுத்தி தெரசா மே-வைக் கொல்ல அவர்கள் சதித் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. தற்போது தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருக்கும் அந்த இருவரும், விரைவில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்படுவர்.
கடந்த மார்ச் மாதம் முதல் மதவாதிகளின் இதுபோன்ற தாக்குதல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளது இது 9-ஆவது முறை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பிரதமரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள இருவரும், வடக்கு லண்டனைச் சேர்ந்த ஜகாரியா ரஹ்மான் (20), பர்மிங்ஹம் பகுதியைச் சேர்ந்த முகமது அகீப் இம்ரான் (21) ஆகியோர் என போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் பிரிட்டனின் லண்டன் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்தனர்.