பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்பும் அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கையை அமெரிக்க அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
பாகிஸ்தானில் பயங்கரவாத, வகுப்புவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் புதிய எச்சரிக்கையை வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக அத்தியாவசியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிக்கையில் குறிப்பிட்டிருப்பது:
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள், வகுப்புவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், அரசு சாரா அமைப்புகளின் ஊழியர்கள், இனக்குழுக்களின் தலைவர்கள், காவல் படையினர் தாக்குதலுக்கு உள்ளாவது அந்த நாட்டில் சகஜமாக உள்ளது.
பாகிஸ்தான் முழுவதும் செயல்பட்டு வரும் உள்நாட்டைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் அமெரிக்கர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள், தூதரகக் கட்டடங்கள், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். அண்மைக் காலமாக வகுப்புவாத வன்முறையும் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. மத நிந்தனைக் குற்றச்சாட்டு தொடர்பான சட்டங்கள் அங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பல தற்கொலைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களும் பலியாகியுள்ளனர். எனவே, மிக அத்தியாவசியமான காரணங்கள் இல்லாவிடில், அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய பயண எச்சரிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.