ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைகளை மீறி யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை ஈரான் வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி வாஷிங்டனில் உள்ள ராணுவ தளத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்த ஏவுகணையின் வடிவமைப்பிலிருந்து இது ஈரானில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த உண்மையை உலகில் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடைகளின் அப்பட்ட மீறலாக யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை ஈரான் வழங்கியுள்ளது. அந்த ஆயுதங்கள் அமெரிக்காவின் நட்பு நாடான சவூதிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஈரான் அளித்த ஏவுகணையை யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதியை நோக்கி வீசியுள்ளனர். ஈரானின் விதிமீறல்கள் தொடர்பாக இதுபோன்ற பல சாட்சியங்கள் அமெரிக்காவின் கைவசம் உள்ளது. மிக பயங்கரமான ஆயுதங்களை யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் வழங்கியுள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த ஏவுகணை ரியாதில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வீசப்பட்டது.
அந்த விமான நிலையத்தை தினசரி ஆயிரக்கணக்கான அப்பாவிப் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் சர்வதேச விமான நிலையத்தைத் தாக்குவதற்காக இந்தக் குறிப்பிட்ட ஏவுகணை வீசப்பட்டது என்று மீண்டும் ஒரு முறை சொல்ல விரும்புகிறேன்.
இதே போன்ற ஏவுகணை வாஷிங்டன், நியூயார்க், லண்டன் சர்வதேச விமான நிலையத்தில் வீசப்படலாம் என்றார் நிக்கி ஹேலி.
ஈரானின் "கியாம்' ரக குறுகிய தொலைவுத் தாக்குதல் ஏவுகணையின் பிரத்யேக வடிவமைப்பு உலகில் ஆயுத நிபுணர்களிடையே நன்கு பரிச்சயமானது. எனவே தற்போது யேமனிலிருந்து சவூதி நோக்கி வீசப்பட்டதாக நிக்கி ஹேலி அறிமுகம் செய்த ஏவுகணை ஈரானின் கியாம் ஏவுகணையே என்பது உறுதியாகியுள்ளது.