லண்டன்: நான் பெரியவள் ஆனவுடன் எனக்கு கூகுளில் வேலை வேண்டும் என்று கூகிளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 7 வயது சிறுமி ஒருவர் கடிதம் எழுதியதும் அதற்கு அவரின் பதிலும் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளிவரும் 'பிசினஸ் இன்சைடர்' பத்திரிக்கையில் வெளியான செய்தி வருமாறு:
இங்கிலாந்தின் ஹெர்பர்ட் பகுதியைச் சேர்த்த 7 வயது சிறுமி க்லோ பிரிட்ஜ்வாட்டர். இவர் கூகிளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,'டியர் கூகிளின் பா ஸ்,என் பெயர் க்லோ. நான் பெரியவள் ஆனவுடன் கூகுளில் வேலை செய்ய விரும்புகிறேன். அதே போல் நான் ஒரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்திலும் வேலை செய்ய விரும்புகிறேன். அத்துடன் ஒலிம்பிஸ்க் நீச்சல் போட்டியிலும் பங்கேற்க ஆசைப்படுகிறேன்' என்று அந்த சிறுமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் அந்த சிறுமி தன்னுடைய கனவுகள், பள்ளி, அவளுடைய சகோதரி மற்றும் தன்னுடைய தந்தைக்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் அவள் எழுதிய முதல் கடிதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றியும் தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள சுந்தர் பிச்சை நீ பள்ளிப்படிப்பை முடித்தவுடன் உன்னிடம் இருந்து வேலைக்கான விண்ணப்பதை எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருப்பதுடன் இறுதியில் எமோஜி எனப்படும் புன்னகை குறியுடன் நிறைவு செய்துள்ளார்.
அந்த கடிதத்தை க்ளோவினுடைய தந்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.