இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் கணவரை இழந்த ஆயிரக்கணக்கான தமிழக பெண்கள் உள்பட பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க சிறப்புக் குழு விரைவில் அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டுப் போரில் தமிழ்ப் பெண்கள் தமது கணவரை இழந்தனர். அவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை அரசு வழங்கி வருகிறது. அவற்றைப் பெற சில ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அந்த ஆவணங்களைப் பெறுவதற்காக அதிகாரிகளை சந்திக்கும்போது, அவர்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், ராணுவத்தினரும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
புதிதாக அமைக்கப்பட உள்ள தேசிய சிறப்புக் குழு மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கு தொடுக்க முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போரில் தங்களது கணவரை இழந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாக இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கடந்த வாரம் கவலை
தெரிவித்திருந்தார்.
போருக்குப் பிறகு கடந்த 2010-ஆம் ஆண்டில் தமிழ்ப் பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த 4 ராணுவ வீரர்களுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.