டொரான்ட்டோ: உலகத் தமிழர்களின் விழாவான பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்திய கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடோ, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாடும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
கனடா நாட்டின் பிரதமரக இருப்பவர் ஜஸ்டின் டுருடோ. இவர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் அங்கு வசிக்கும் தமிழர்களின் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டு பாராளுமன்றத்தின் மூலம் அறிவிப்பு செய்தார். இதற்கு அங்குவாழும் தமிழ் சமூகத்தினர் அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஜஸ்டின் டுருடோ நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்றில் அந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்தார்.அதில் அவர், ‘வணக்கம்' என்று கூறி தமிழில் தொடங்கி, கனடாவாழ் தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர். இந்த பொங்கல் பண்டிகையானது விசேஷ அர்த்தமும், பாரம்பரியமும் கொண்டது. அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தது. கனடாவாழ் தமிழர்கள் இந்த நாட்டை வலிமையான, வளமான நாடாக ஆக்கியவர்கள் என்று பாராட்டியிருந்தார். உரையை முடிக்கும் போது ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் கூறி முடித்திருந்தார்.
இது தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய வேளையில் கடந்த 2015-ம் ஆண்டு கனடா நாட்டு தமிழர்கள் நடத்திய பாரம்பரிய விழா ஒன்றில் பங்கேற்ற பிரதமர் ஜஸ்டின் டுரூடோ, அங்குள்ள தமிழர்களுடன் சேர்ந்து சிலம்பம் விளையாடினார்.
இந்த புகைப்படமானது தற்போது இணையதளத்தில் வைரலாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.