மெக்சிகோ சிட்டி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பது போல அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட பணம் எதுவும் குடுக்க முடியாது என்று மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ தெரித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள டொனால்டு டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் பொழுதே அமெரிக்காவில் பக்கத்து நாடான மெக்சிகோவில் இருந்து அகதிகள் வந்து குடியேறுவது தடுக்கப்படும் என்றும், அதற்காக எல்லைப்பகுதியில் தனியான சுவர் ஒன்று கட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் புதன் அன்று மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கான ஆணையில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். மேலும் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலமெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
மெக்சிகோவுக்கு எந்த விதமான சுவர் கட்டுவதிலும் நம்பிக்கை இல்லை. இது போல எந்த விதமான சுவர் எழுப்பும் பணிக்கும் மெக்சிகோ பணம் அளிக்காது என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகளை சந்திக்க மெக்சிகோ நாட்டின் குழுவினர் புதன் அன்று வாஷிங்க்டன் சென்றுள்ளார்கள். அவர்கள் வந்து விரிவான அறிக்கை சமர்ப்பித்ததும் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்வதென்று முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.