இஸ்ரேலில் மோடியை சந்திக்கவிருக்கும் இந்திய செவிலியர்: நெகிழ்ச்சியான பின்னணி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது 2 வயது யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்திய செவிலியர் சாண்ட்ரா சாமுவேல், இஸ்ரேலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
இஸ்ரேலில் மோடியை சந்திக்கவிருக்கும் இந்திய செவிலியர்: நெகிழ்ச்சியான பின்னணி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது 2 வயது யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்திய செவிலியர் சாண்ட்ரா சாமுவேல், இஸ்ரேலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பது குறித்து, இந்திய செவிலித் தாய் சாண்ட்ரா சாமுவேல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை முதல் (ஜூலை 4) இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் மோடி, ஜெருசலேம் நகரில் தங்கியுள்ள சாண்ட்ரா சாமுவேலை சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இதுகுறித்து சாண்ட்ரா சாமுவேல் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி என்னை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் என்ற செய்தியறிந்ததும் அதனை என்னால் நம்பவே முடியவில்லை. அந்தச் செய்தி எனக்கு இன்ப அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது.

பிரதமர் என்னைச் சந்தித்துப் பேசுவதை எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். மும்பைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இந்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டிருப்பதை இது காட்டுகிறது என்றார் சாண்ட்ரா.

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சுத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலின்போது, யூத மத அமைப்பினர் தங்கியிருந்த நாரிமன் இல்லத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர். இதில் அங்கிருந்த யூத மதகுரு கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் அவரது மனைவி ரிவிகா உள்பட 8 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

எனினும், கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் தம்பதியரின் 2 வயது மகன் மோஷி ஹோல்ட்ஸ்பெர்கை, அவனுக்கு செவிலித் தாயாக நியமிக்கப்பட்டிருந்த சாண்ட்ரா சாமுவேல் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார்.

பயங்கரவாதிகள் நுழைந்தவுடன் ஓர் அறைக்குள் பதுங்கிக் கொண்ட சாண்ட்ரா, பல மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை மோஷியின் அழுகுரலையும், தனது பெயரைச் சொல்லி அவன் அழைப்பதையும் கேட்டார்.

அதனைத் தொடர்ந்து, தனது உயிரைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அறையை விட்டு வெளியே வந்த சாண்ட்ரா, மேல் தளத்துக்கு சென்று அங்கு அழுது கொண்டிருந்த மோஷியை நெஞ்சோடு அணைத்தவாறு அந்த வீட்டை விட்டு தப்பி வெளியே ஓடி வந்தார்.

நாரிமன் இல்லத்திலிருந்த ஏறத்தாழ அனைவரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில், சாண்ட்ராவின் துணிச்சல் காரணமாக அவரும், குழந்தை மோஷியும் உயிர் பிழைத்தனர்.

சாண்ட்ராவின் தீரச் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் அரசு அவருக்கு கெளரவக் குடியுரிமையும், இஸ்ரேலில் நிரந்தரமாகத் தங்குவதற்கான குடியேற்ற உரிமையும் வழங்கி கெளரவித்தது. தற்போது அவர் ஜெருசலேம் நகரில் பணியாற்றி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com