தெஹ்ரான்: ஈரான் நாட்டு பாராளுமன்றம் மற்றும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரான ருஹொல்லா கொமெய்னி வழிபாட்டு தளத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் ஒன்று ஈரான். இந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டின் பாராளுமன்றம் அமைந்துள்ளது. மேலும் அங்கு நிலவி வந்த முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவரும், அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவருமான ருஹொல்லா கொமெய்னி வழிபாட்டு தளமும் அமைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் இன்று காலை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர் என உள்ளூர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதலில் அவை பாதுகாவலர் ஒருவர் காயம் அடைந்துள்ளார் எனவும், காயமடைந்த பிறர் பற்றிய தகவல் தெரியவில்லை என்றும் முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற தாக்குதல் சம்பவமானது முடிவுக்கு வந்துள்ளதாகவும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாவும்,நேரடி சாட்சிகளை மேற்கோள் காட்டி புகழ் பெற்ற ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.