தலிபான் மற்றும் ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதால், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அந்த நாட்டிடமிருந்து கிடைக்கும் உதவியைவிட அச்சுறுத்தலே அதிகம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு விவகாரங்கள் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து "போர்த் தந்திரம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம்' (சிஎஸ்ஐஎஸ்) என்ற அமெரிக்க அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டு அரசியல், ஆட்சி, வறுமை ஒழிப்பு ஆகிய விவகாரங்களில் ஆப்கானிஸ்தான் அரசு மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது.
தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் தொடர்ந்து இருந்து வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில் ஒரு கூட்டாளியாக இருப்பதைவிட, அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாகவே பாகிஸ்தான் பெரும்பாலும் இருந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் வாக்குறுதியை நிறைவேற்ற, அந்த நாட்டு அரசு இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மேலும், தலிபான்களுக்கு ஆதரவும், ஹக்கானி பயங்கரவாதிகளுக்கு சலுகையும் காட்டுவது தொடர்ந்தால், பாகிஸ்தானுக்குக் கிடைத்து வரும் அமெரிக்க உதவி முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பதை அமெரிக்க அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.