சீனாவில் சிறுவர் பள்ளி ஒன்றின் நுழைவு வாயில் அருகே நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 8 பேர் உயிரிழந்தனர். 65 பேர் காயமடைந்தனர்.
கிழக்கு சீனாவின் ஜியாங்சூ கடலோர மாகாணத்தில் உள்ள ஃபெங்ஸியான் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுவர் பள்ளியின் நுழைவு வாயில் அருகே சாலையோரமாக, கேஸ் சிலிண்டர் வெடிக்கும் பயங்கர சத்தம் கேட்டதாகவும், இதைத்தொடர்ந்து பெரும் விபத்து நேரிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுவர், சிறுமியர் மற்றும் பொதுமக்கள் உள்பட 65க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர் அனைவரும் அருகில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதி முழுவதும் ரத்தமாக காட்சியளிப்பதாகவும், இதற்கு தீவிரவாத இயக்கம் ஏதேனும் காரணமா, என்பது பற்றி விசாரித்து வருவதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் குழந்தைகள் அல்லது ஆசிரியர்கள் யாரும் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
குண்டுவெடிப்பு ஈடுபட்டவர்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.