ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் என பல தரப்பினரின் ஆதிக்கம் காரணமாக, ஆப்கானிஸ்தான் மிகவும் குழப்பமான அரசியல் சூழலில் உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள ஷியா மக்கள் வழிபடும் ஜஹ்ரா மசூதியில், தொழுகை நேரத்தில், இன்று திடீரென தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இதில், பொதுமக்கள் 3 பேரும், போலீஸார் ஒருவர் என 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தீவிர விசாரணை நடத்திவருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு, ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.