டமாஸ்கஸ்: சரவதேச அளவில் பிரபலமான ஐ.எஸ் தீவிரவாத இயக்கத் தலைவரான அல் பாக்தாதி வான் வழி தாக்குதலில் கொல்ல ப்பட்டதாக ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி. இவர் தற்பொழுது ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நகரில் தலைமறைவாக இருந்து, அங்கிருந்து சிரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பாக்தாதியை உயிருடன் அல்லது பிணமாக கொண்டு வருவோருக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத்த தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதி கொல்லபட்டு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
மே மாத இறுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய வான் வழி தாக்குதலில், ஐ.எஸ்ஸின் மற்ற மூத்த தளபதிகளுடன் சேர்ந்து அபு பக்ர் அல் பாக்தாதியும் கொல்லப்பட்டு விட்டார் என்று ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் ராக்கா நகரின் தெற்கு புறநகர் பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலில் 30 தீவிரவாத குழு தலைவர்களுடன் சேர்த்து, சுமார் 300 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.
ஆனால் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஊடகம் எதுவும் இத்தகவலை குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.இதற்க்கு முன்னரும் அல் பாக்தாதி உயிரிழந்து விட்டதாக பலமுறை தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.