ஜப்பான் கடற்பகுதியில் சரக்கு கப்பலுடன் அமெரிக்கப் போர்க் கப்பல் மோதிய விபத்தில் இறந்த 7 அமெரிக்க மாலுமிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்த மாலுமிகளின் பெயர்களை அமெரிக்கக் கடற்படை முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
உயிரிழந்த 7 பேரும் 19 வயது முதல் 37 வயதுக்குள்பட்டவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் 'ஃபிட்ஸ்ஜெரால்ட்' போர்க்கப்பல் ஜப்பான் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பிலிப்பின்ஸ் நாட்டு சரக்கு கப்பலுடன் கடந்த சனிக்கிழமை எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அமெரிக்க போர்க் கப்பலின் வலதுபுறம் பலத்த சேதமடைந்தது. மேலும், இந்த விபத்தின்போது அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 7 மாலுமிகள் காணாமல் போயினர். அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த ஏழு மாலுமிகளின் உடலும் சேதமடைந்த கப்பலுக்குள் இருந்தே மீட்கப்பட்டன. அடையாளம் காணும் பணிக்காக அந்த உடல்கள் யோகோசுகா கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.