சிரியாவில் அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையைச் சேர்ந்த போர் விமானத்தை அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா ஆதரவளித்து வரும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் தாக்குதல் நிகழ்த்தியபோது, சிரியா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளைக் குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தச் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிரியா அரசு தெரிவித்தது.
சிரியா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சிரியா விமானங்களுக்குப் பாதுகாப்பாக தங்கள் போர் விமானங்கள் அமெரிக்க விமானங்களை எதிர்கொள்ளும் என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள், ஏற்கெனவே சிக்கலான சிரியா உள்நாட்டுப் போர் பிரச்னையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
ஈரான் தாக்குதல்: இதற்கிடையே, இந்த சிக்கலை மேலும் அதிகரிக்கும் வகையில், சிரியாவிலுள்ள ஐ.ஏஸ். நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குல் நிகழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்திய ஐ.எஸ். அமைப்பைப் பழிவாங்கும் வகையில் அந்த ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.