வட மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், தலைநகர் பமாகோவையொட்டிய சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்த்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மாலியின் கங்காபா லீ கம்பெமென்ட் சுற்றுலாத் தலம் வெளிநாட்டுப் பயணிகளிடையே பிரபலமானது.
இந்தப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கியுடன் வந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த 30 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.
அதையடுத்து, அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இதில் 2 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாலியில் இரண்டு ஆண்டுகளுக்குள் சுற்றுலாத் தலத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.