"எல்லைகள் கடந்து பரவிவரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எந்தவொரு தேசத்தாலும் தனித்து நின்று தோற்கடிக்க முடியாது' என்று ஐ.நா.வுக்கான இந்தியத் துணைத் தூதர் தன்மயா லால் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான ஆலோசனை மையத்தின் கூட்டம் ஐ.நா.வில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் பங்கேற்று தன்மயா லால் பேசியதாவது:
எந்தவொரு தேசத்தாலும் பயங்கரவாத அச்சுறுத்தலை தனித்து நின்று எதிர்கொள்ள முடியாது. மிக பலம்வாய்ந்த தேசமாக இருந்தாலும் பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாது. அதற்குக் காரணம், பயங்கரவாத அச்சுறுத்தல் பல நாடுகளின் எல்லைகளையும், பிராந்தியங்களையும் கடந்த பரந்து விரிந்து வளர்ச்சி பெற்று வருகிறது.
பயங்கரவாதத்தை வேரறுக்க சர்வதேச அளவில் ஒத்துழைப்பு வேண்டும். பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான ஆலோசனை மையத்தை ஐ.நா. உருவாக்கியுள்ளது. இந்த மையம் பயங்கரவாதத்தை வேரறுக்க அனைத்து நாடுகளுக்கும் உதவும் என்று நம்புகிறோம் என்றார் தன்மயா லால்.