வாஷிங்டன்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக வெள்ளை மாளிகையில் அளிக்கப்படும் விருந்து நிகழ்ச்சி இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது.
அதிபராக இருந்த பில் கிளிண்டன் ஆட்சி காலத்தில் தொடங்கி, அவருக்குப் பிறகு ஜார்ஜ் டபிள்யு. புஷ், பராக் ஒபாமா வரை சுமார் 20 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த ரம்ஜான் விருந்தை வெள்ளை மாளிகை இந்த ஆண்டு அளிக்கவில்லை.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் இணைந்து ரம்ஜான் வாழ்த்துச் செய்தி மட்டுமே வெளியிட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகையில் அளிக்கப்படும் ரம்ஜான் விருந்தில், ஏராளமான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும், காங்கிரஸ் உறுப்பினர்களும், இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது.