105 ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உடைந்த பகுதிகளை நேரில் சுற்றிப் பார்ப்பதற்கான வாய்ப்பை, தனியார் நிறுவனமொன்று வழங்கவிருக்கிறது.
'புளூ மார்பிள்' என்ற அந்த பிரிட்டன் நிறுவனம், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆழ்கடல் கலத்தின் உதவியுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் 4,000 மீட்டர் ஆழத்தில் தரை தட்டியிருக்கும் டைட்டானிக் கப்பலை தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் சுற்றிக்காட்டவுள்ளது.
இந்தக் கடலடி சுற்றுலாவுக்கான கட்டணம் 1.05 லட்சம் டாலர் (சுமார் ரூ.68 லட்சம்) என்றாலும், முதல் பயணத்துக்கான அனைத்து இருக்கைகளும் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்புப் பயணக் கட்டணமான 4,350 டாலரின் (சுமார் ரூ.2.8 லட்சம்) தற்போதைய மதிப்பையே கடலடிச் சுற்றுப் பயணத்துக்கான கட்டணமாக நிர்ணயித்துள்ளதாக அந்த சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த 8 நாள் சுற்றுப் பயணம் கனடா நாட்டுக் கரையிலிருந்து புறப்படும். ஆழ்கடலில் இறங்கி, டைட்டானிக் கப்பலைக் கண்டு, மீண்டும் மேலே வர 3 மணி நேரமாகும்.
'ஆர்எம்எஸ் டைட்டானிக்', பிரிட்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி 2,224 பேருடன் கடந்த 1912-ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.
பயணத்தின் நான்காவது நாளிலேயே அந்தக் கப்பல் பனிப்பாறை மீது மோதி வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து, நவீன கடல் பயண வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.