சியோல்:
'பேட்டரி வெடிப்பு' புகாரினால் திரும்பப் பெறப்பட்ட தனது நோட்-7 மாடல் அலைபேசிகளை மறு உருவாக்கம் செய்து விற்க சாம்சங் தயாராகி வருகிறது.
உலகப் புகழ் பெற்ற மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான 'சாம்சங்' தன்னுடைய உயர்திறன் வகை ஸ்மார்ட் போனான 'நோட்-7' வகை அலைபேசிகளை 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அறிமுகம் செய்தது. ஆனால் அறிமுகமான சில நாட்களிலேயே போனை சார்ஜ் செய்யும் பொழுது அதன் பேட்டரி வெடிப்பதாகவும், போன் எரிந்து விடுவதாகவும் பரவலாக புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்துஉலகம் முழுவதும் ஏறக்குறைய 40 லட்சம் இவ்வகை அலைபேசிகளை அந்நிறுவனம் திரும்பப் பெற்றது. இதன் மூலம் சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.542 கோடி நஷ்டம் உண்டானது. மேலும் நிபுணர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் போனில் உள்ள அயன் வகை பேட்டரிகளே இதற்கு காரணம் என்று பின்னர் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் 'பேட்டரி வெடிப்பு' புகாரினால் திரும்பப் பெறப்பட்ட தனது நோட்-7 மாடல் அலைபேசிகளை 'ரீபர்பிஷிங்' என்னும் மறு உருவாக்கம் செய்து விற்க சாம்சங் நிறுவனம் தயாராகி வருகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எப்பொழுது எந்த நாடுகளில் இந்த விறபனையை மேற்கொள்வது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட நாடுகளில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்களிடம் ஆலோசனை செய்த பின்னரும், அங்கே உள்ள தேவையைப் பொறுத்தும்தான் அந்த முடிவுகள் எடுக்கப்படும். மொத்தம் 30 லட்சம் போன்களை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.