லண்டன்: லண்டனிலுள்ள இந்திய உணவகம் ஒன்றில் மனித இறைச்சி பயன்படுத்தப்படுவதாக வெளியான செய்தியையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதை மூட வேண்டும் என்று குரலெழுப்பி உள்ளனர்.
லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் "கர்ரிடுவிஸ்ட்' என்னும் இந்திய உணவகத்தை ஷின்ரா பேகம் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த உணவகத்தில் மனித இறைச்சி பயன்படுத்தப்படுவதாக, குறும்பான செய்திகளை வெளியிடும் வலைதளம் ஒன்றில் தகவல் வெளியாகியது.
இதையடுத்து, இந்தச் செய்தியை சிலர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பின்னர், இந்தச் செய்தி இணையத்தில் வேகமாகப் பரவியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஷின்ரா பேகம் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்த உணவகத்தில் மனித இறைச்சி பயன்படுத்தப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை.
இந்த உணவகம் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தவறான செய்தியால் எங்கள் வியாபாரம் குறைந்துவிட்டது.
எவ்வளவு தைரியம் இருந்தால் மனித இறைச்சியைப் பயன்படுத்துவீர்கள் என்று சிலர் எங்களிடம் கேள்வியெழுப்புகின்றனர்? இந்த உணவகத்தை இழுத்து மூடாவிட்டால், இதன் ஜன்னல்களை உடைத்து விடுவேன் என்று ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இன்னொருவரோ இதுகுறித்து போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இன்னும் சிலர் இந்த உணவகம் அமைந்துள்ள கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்குவோம் என்று மிரட்டியுள்ளனர்.
சில வரிகளே கொண்ட அந்தச் செய்தியில் எழுத்துப் பிழைகளும், இலக்கணப் பிழைகளும் உள்ளன. எனினும், அதை மக்கள் உண்மையென்று நம்பியுள்ளனர் என்றார் ஷின்ரா பேகம்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.