இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல்களுக்கு 35 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
பாக்தாதின் தெற்கு அபு தஸ்ஸீர் நகரில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியைக் குறிவைத்து பயங்கரவாதி தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார். வெடிபொருளை நிரப்பிய காரை சோதனைச் சாவடியில் மோதி வெடிக்கச் செய்தார். இதில், 24 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மற்றொரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் மற்றொரு தற்கொலைத் தாக்குதலை பஸ்ரா நகரில் நிகழ்தினர். வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்துடன் வந்த பயங்கரவாதிகள் அங்குள்ள சோதனைச் சாவடியை குறிவைத்து தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தினர். இதில், 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், வெடிகுண்டுகளை நிரப்பிய வாகனத்தில் வந்த மற்றொரு பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்யும் முன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரண்டு தற்கொலைத் தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.