ஆப்கனில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கரீம் யுரேஷ் தெரிவித்ததாவது:
ஃபர்யாப் மாகாணத்தில் உள்ளூர் பாதுகாப்பு படையினரின் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதலை நிகழ்த்தினர்.
கோஹிஸ்தநாத் மாவட்டத்தில் இறுதிச் சடங்கு நிகழ்சியில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய பாதுகாப்பு படையினர் வாகனத்தின் மீது சாலையோரத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர்.
இதில், உள்ளூர் படைத் தளபதி ஒருவரும் அவரின் நான்கு பாதுகாவலர்களும் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் சில பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றார் அவர்.
ஃபர்யாப் மாகாணத்தில் ஆப்கன் படைகள் மீதான தாக்குதலை அதிகரித்து வரும் தலிபான் அல்லது இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பினரே இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.