பிரிட்டன் நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்த இந்தியப் பெண், அங்கு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க விடுதி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த கல்யாணி உத்தமன் (59) என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டில் பிரிட்டன் சென்றபோது ஸ்காட்லாந்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியொன்றில் தங்கினார்.
அப்போது குளியலறையில் உள்ள குழாய்கள் உடைந்து சூடான நீர் வெளியேறி விபத்துக்குள்ளானதில் கல்யாணி பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அடுத்த சில நாள்களில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கல்யாணியின் குடும்பத்தினர், விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டபோது உரிய விளக்கம் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் விடுதியின் மீது வழக்குத் தொடுத்தனர். ஏறத்தாழ 5 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் இந்தச் சம்பவம் தொடர்பாக கல்யாணி குடும்பத்தினரிடம் விடுதி நிர்வாகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதனை விடுதி நிர்வாகம் தரப்பில் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.