லக்னௌ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராக தில்லியில் இருந்து எல்.கே.அத்வானி லக்னௌவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று லக்னௌ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இவருடன், மத்திய அமைச்சர் உமா பாரதி, மற்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் ஆஜராக உள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை தொடர உத்தரவிட்டதுடன் 2 ஆண்டுகளில் வழக்கை முடிக்கவும் அறிவுறுத்தியது.
அதன்படி பாபர் மசூதி இடிப்பு வழக்கு லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின் போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் வரும் 30-ம் தேதி நேரில் தவறாமல் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.