அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு அவர் செய்த இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஜப்பான் அரசு தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த தொட்டியில் கோய் இன மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் அபே ஆகிய இருநாட்டுத் தலைவர்களும் உணவளிக்க விரும்பினர்.
அப்போது இருவரிடமும் அந்த மீன்களுக்கான உணவு அடங்கிய பெட்டி அளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் அதிலிருந்து சிறிய அளவில் அந்த மீன்களுக்கு உணவிட்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், சற்று நேரத்தில் பொறுமை இழந்த டிரம்ப், அந்த பெட்டியை முழுவதும் பிரித்து அந்த உணவு முழுவதையும் மீன் தொட்டியில் கொட்டி விட்டார்.
இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதைப் பார்த்த வளர்ப்பு மீன் பிரியர்கள் டிரம்பை சகட்டு மேனிக்கு வருத்தனர்.
அதில், இதுமாதிரியான வளர்ப்பு மீன்களால் சிறிய அளவில்தான் உணவு எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் டிரம்ப், முட்டாள்தனமாகச் செயல்பட்டு இக்காரியத்தை செய்துள்ளார். மீனுக்கு உணவளிக்கக்கூட பொறுமை இல்லாதவர் இந்த டிரம்ப் என ஒருதரப்பினர் கொதித்தனர்.
மற்றவர்கள், மீனுக்குக் கூட சரியாக உணவளிக்கத் தெரியாத டிரம்ப், என்று அவரது அரசாட்சி குறித்து சூசகமாக கிண்டலடித்தனர்.
இந்நிகழ்வுகளின் போது உடனிருந்த அமெரிக்க முதன்மைச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் உள்ளிட்ட அனைவரும் டிரம்பின் இந்தச் செயலைக் கண்டு சிரித்துவிட்டனர்.