இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டுமென்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பென்டகன் தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
தேசியப் பாதுகாப்பு அதிகார மசோதா - 2018-ஐ நிறைவேற்றுவதில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை உறுப்பினர்களும், செனட் (மேலவை) உறுப்பினர்களும் தங்கள் வேறுபாடுகளைக் களைய வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அப்போதுதான் அந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும், உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும்.
ஆப்கானிஸ்தானில் போர் நிவாரணப் பணிகளையும், மனிதாபிமான உதவிகளையும் மேம்படுத்த இந்தியாவுடன் ஒத்துழைப்பு அதிகரிப்பது மிகவும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அதிகார மசோதா என்பது அமெரிக்க ராணுவ பட்ஜெட்டை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2017-ஆம் ஆண்டுக்கான தேசியப் பாதுகாப்பு அதிகார மசோதாவில் அமெரிக்காவின் முக்கியமான பாதுகாப்புத் துறை கூட்டாளி என்று இந்தியாவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது.
இப்போது 2018-ஆம் ஆண்டுக்கான தேசியப் பாதுகாப்பு அதிகார மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும்.
இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டுமென்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ஆகியோரிடமும் பென்டகன் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை கூட்டாளி என்று கடந்த முறை இந்தியா அறிவிக்கப்பட்டதன் மூலம், இருநாடுகளிடையே, கூட்டு ராணுவப் பயிற்சி, பாதுகாப்பு உத்தி வகுப்பதில் ஒத்துழைப்பு, ராணுவத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டன.