சவூதி அரேபியாவில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. விளையாட்டு செயல்பாடுகளில் ஒன்றாக யோகாவை இணைத்து அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சவூதி அரேபியாவில் உள்ள அரபு யோகா அறக்கட்டளையின் நிறுவனர் நௌஃப் மார்வாய் தனது முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:
யோகா என்பதற்கு ஒருங்கிணைப்பு என்பது பொருளாகும். மனதையும், உடலையும் ஒருவர் ஒருங்கிணைக்கும்போது நல்ல பயன்கள் கிடைக்கின்றன. பல்வேறு தடைகளைத் தாண்டி சவூதி அரேபியாவில் யோகாசனப் பயிற்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதற்காக இந்திய அரசுக்கும், சவூதியில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் முஸ்லிம் மதத் தலைவர்கள் சிலர், யோகாசனம் செய்வது இஸ்லாமிய மத வழக்கத்துக்கு எதிரானது என்று கூறி அதனை தடுத்து வரும் நிலையில், இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் யோகாசனப் பயிற்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது.
கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ராஃபியா நாஸ் என்ற இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் அவர் சார்ந்த மதத்தினரால், யோகா பயிற்சி மேற்கொள்ளக் கூடாது மிரட்டப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, ஐ.நா.வால் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. மோடி தலைமையிலான மத்திய அரசு இதற்கான முயற்சியை மேற்கொண்டது.