வட கொரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சிறப்புத் தூதர் ஒருவரை அந்த நாட்டுக்கு சீனா அனுப்பவிருக்கிறது. வட கொரியாவின் கூட்டாளியான சீனாவில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதன் எதிரொலியாகவே இந்த நடவடிக்கையை சீனா மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா புதன்கிழமை கூறியதாவது:
அதிபர் ஜீ ஜின்பிங்கின் சிறப்புத் தூதர் சாங் தாவ், விரைவில் வட கொரியா சென்று அந்த நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டின் முடிவுகள் குறித்து அவர் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னிடம் அவர் எடுத்துரைப்பார் என்று அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சுற்றுப் பயணம் குறித்தோ, வட கொரியாவிடம் தனது செல்வாக்கை சீனா பயன்படுத்தி அதன் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று அவர் சீன அரசிடம் கேட்டுக் கொண்டுக் கொண்டது குறித்தோ அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவின் சிறப்புத் தூதர் ஒருவர் வட கொரியா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.