பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் மேற்கொண்டு முயற்சிகளை முழுமையாக அங்கீகரிக்குமாறு அமெரிக்காவை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும், தனது பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க முப்படைகளின் தளபதி ஜோசஃப் டன்ஃபோர்ட் அண்மையில் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முன்னிலை வகித்து வருகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அந்த நாடு பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. அதற்காக பாகிஸ்தான் பல தியாகங்களை செய்துள்ளது. அந்த முயற்சிகளை சர்வதேச நாடுகள் முழுமையாக அங்கீகரிக்க வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகளுக்கு சீனா முழு ஒத்துழைப்பு அளிக்கும். அந்த வகையில், பிராந்தியம் மற்றும் உலகின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் சீனா இணைந்து செயலாற்றும் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.