ஆதார் அட்டை திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் இந்திய அரசுக்கு சுமார் ரூ.58,401 கோடி செலவு குறைந்துள்ளது என்று ஆதார் ஆணையத்தின் தலைவராக இருந்த நந்தன் நிலகேணி தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டை வழங்கும் இந்திய தனிநபர் அடையாள அட்டை ஆணையத்தின் தலைவராக முந்தைய காங்கிரஸ் அரசால் நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டார். இப்போது, அத்திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆண்டுக் கூட்டத்தில் மின்னணுப் பொருளாதாரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிலகேணி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் ஆதார் குறித்து அவர் கூறியதாவது:
இப்போது இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் எண் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் மானியம், சமூக நலத் திட்டங்களில் போலியான ஆவணங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுவிட்டது. இதனால் இந்திய அரசுக்கு ரூ.58,401 கோடி அளவுக்கு செலவு குறைந்துள்ளது.
ஏறக்குறைய 50 கோடி மக்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டனர். அரசு அவர்களுக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்திவிடுகிறது. இது உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப்பரிமாற்ற நடைமுறையாகும்.
இன்றைய நவீன உலகம் மின்னணு முறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதில் பணத்தை பரிமாற்றம் செய்ய வேண்டிய நபர்களை சரியாக அடையாளம் காணுதல், ஒரு பைசா கூடுதல், குறைவு இல்லாமல் பணத்தை பரிமாறுதல், ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை ஆகியவை மிகவும் முக்கியமானது. இதை இந்தியா வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது என்றார் அவர்.