பசிபிக் பெருங்கடலில் கடும் சூறாவளி வீசியதால் இந்திய சரக்குக் கப்பல் மூழ்கியது. கப்பலில் இருந்த 11 இந்தியர்கள் மாயமாகிவிட்டதாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு கடற்படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
பிலிப்பின்ஸ், ஜப்பான் எல்லையையொட்டி இந்தியாவுக்குச் சொந்தமான எமரால்டு ஸ்டார் கார்கோ கப்பல் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. இந்தியர்கள் 26 பேர் அந்தக் கப்பலில் பயணம் செய்தனர். கடலில் மூழ்கத் தொடங்கியதும் அபாயக் கட்டத்தில் இருப்பதாக சரக்கு கப்பலில் இருந்து சிக்னல் அனுப்பப்பட்டது. அந்த வழியே சென்றுகொண்டிருந்த ஹாங் காங் கப்பல் ஒன்றுக்கு அந்த சிக்னல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, எங்களுக்கு தகவல் கிடைத்தது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 15 இந்தியர்களை மீட்டிருக்கிறோம். 11 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடி வருகிறோம். 2 படகுகள், 3 விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சூறாவளி காரணமாக மீட்புப் பணியில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டு வருகிறது என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.