அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு: பல்கலைக்கழகம் மூடல்
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 8:25 மணியளவில் திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் குறித்த முழு விவரங்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.
பல்கலைக்கழகம் முழு பாதுகாப்பில் இருப்பதாகவும், இவ்விகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விர்ஜீனியா மாகாண காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் லாஸ் வேகாஸ் நகரத்தில் இசை நிகழ்ச்சியின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் நினைவு மறைவதற்குள் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அமெரிக்கர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.