அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் எரியும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்தது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. மளமளவென பரவிய அந்த தீயால் 89,700 ஹெக்டேரிலான காடு முழுவதும் எரிந்து சாம்பலானது. ஆயிரக்காணக்கானோர் வீடுகளை இழந்து நிற்கதியாகியுள்ளனர்.
மென்டோசினோ நகரத்திலிருந்து 14 வயது சிறுவனின் உடல் அவரது வீட்டுக்கு அருகே இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33}ஆக அதிகரித்தது. பலியானவர்களின் உடல்கள் மோப்ப நாய் உதவியுடன் மீட்கப்பட்டன.
காட்டுத் தீயால் 1,308 பேர் காணாமல் போனதாக முதலில் தகவல்கள் வெளியாகின. அதில், 1052 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. எஞ்சியவர்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் 9,000}க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சொனோமோ, மென்டோசினோ மாவட்டங்களில் ஆங்காங்கே 17 இடங்களில் பெரும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்த போராடி வருகிறோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். பல இடங்களில் தீயின் தீவிரம் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், காற்றின் தீவிரம் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கோடை காலத்தில் அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் காட்டுத் தீ ஏற்படுவது பொதுவான நிகழ்வாக உள்ளது. கடந்த 1933}இல் லாஸ் ஏஞ்சலீஸ் வட்டத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி 29 பேரும், 1991}இல் ஓக்லண்டு ஹில்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 25 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.