சோமாலியாவில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நிகழ்த்திய லாரி வெடிகுண்டுத் தாக்குதலில் 189 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தலைநகர் மொகடிஷுவில் லாரியில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதிகள் அதனை மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த முக்கிய சாலை சந்திப்பில் வெடிக்கச் செய்து மிகப்பெரிய தாக்குதலை நிகழ்த்தினர்.
பல்வேறு முக்கிய அமைச்சரவை அலுவலகங்கள் அமைந்த அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 189 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இருப்பினும், அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தால் அருகில் இருந்த பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர், உறவினர்கள் ஈடுபட்டனர்.
இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று சோமாலியா அதிபர் முகமது அப்துல்லாஹி முகமது அறிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்குத் தேவையான ரத்த தானம் உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த லாரி வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் பயங்கரவாதிகள் தான் காரணம் என்று சோமாலியா அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா கண்டனம்: சோமாலியாவில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ள ஈவு இரக்கமற்ற, கோழைத்தனமான தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அல்-ஷாபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலியா ராணுவம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த 20,000 வீரர்கள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.