சோமாலியாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடி குண்டுத் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 358-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து சோமாலியா அரசு தெரிவித்துள்ளதாவது:
தலைநகர் மொகடிஷுவில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் சக்தி வாய்ந்த லாரி வெடிகுண்டுத் தாக்குதலை நிகழ்த்தினர். இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 358-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 56-ஆகவும் உள்ளது என்று அந்த அரசு தெரிவித்துள்ளது. லாரியில் 500 கிலோ எடையிலான வெடி பொருள்களை எடுத்து வந்து வெடிக்கச் செய்ததே இந்த மாபெரும் உயிரிழப்புக்கு காரணம் என பல வெடிகுண்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தநிலையில், அல்-காய்தாவுடன் நெருங்கிய தொடர்புடைய அல்-ஷபாப் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் வழக்கம்போல் இந்த தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கக்கூடும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.