துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் அய்ஹுன் ஊஸுன் (50 வயது). இவர் ஃபேஸ்புக் லைவ் பதிவின் மூலம் தனது தற்கொலையை பதிவு செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகள் தன்னிடம் அனுமதி பெறாமல் திருமணம் செய்துகொண்டது, தன்னை மதிக்காதது உள்ளிட்ட காரணங்களால் இம்முடிவை மேற்கொண்டதாக அந்த விடியோ பதிவில் கூறியுள்ளார்.
அந்த விடியோ பதிவில் அய்ஹுன் ஊஸுன் பேசியதாவது:
இந்த பதிவை நான் நேரடியாக ஒளிபரப்பு செய்வது எனது விருப்பமாகும். இந்த நிலைக்கு என்னை ஆளாக்கியவர்கள் யாரும் எனது இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டாம். இன்று எனது மகள்களில் ஒருவருக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். இதைக் கொண்டாடும் விதமாக என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விருந்துக்கு அழைத்தாள். ஆமாம், இது அவளின் திருமண நாள். ஆனால் அதற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. என்னை ஒரு மனிதனாகவே யாரும் மதிக்கவில்லை. இந்த திருமண ஏற்பாடுகள் எதுவுமே எனக்கு தெரியாது. நான் உயிருடன் இல்லை எனக் கூறிக்கொண்டு எனது மாமனார் இந்த திருமண ஏற்பாடுகளைச் செய்துவிட்டார். கடைசி நேரத்திலாவது என்னை திருமணத்துக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை.
இதுதொடர்பாக எனது மனைவி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, திருமணம் தொடர்பாக என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் என்னை சந்திக்க விருப்பமில்லை என்று கூறினார். என்னைப் போன்று நரக வேதனையை யாரும் அனுபவிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டே தன் அருகில் இருந்த துப்பாக்கியை எடுத்து தன் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனை ஃபேஸ்புக் வலைதளத்தில் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் முன்பு கூடி தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று கூறியும் அவர்
இம்முடிவை மேற்கொண்டார்.
இந்நிலையில், தற்கொலை தொடர்பாக துருக்கி காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. விரக்தியின் முடிவால் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.