இரட்டைக் குடியுரிமை சர்ச்சை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய துணைப் பிரதமர்!

இரட்டைக் குடியுரிமை  வைத்திருந்ததாக எழுந்த சர்ச்சையின் காரணமாக ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பர்னபி ஜோய்ஸினை, தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை சர்ச்சை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய துணைப் பிரதமர்!

கான்பெரா: இரட்டைக் குடியுரிமை  வைத்திருந்ததாக எழுந்த சர்ச்சையின் காரணமாக ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பர்னபி ஜோய்ஸினை, தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஆளுங்கட்சியான தேசிய கட்சியின் சார்பாக துணை பிரதமராக இருப்பவர் பர்னபி ஜோய்ஸ். இவருடன் சேர்த்து ஐந்து அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்ட பொழுது இரட்டைக் குடியுரிமை  வைத்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக அவர்கள் மேல் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேசியக் கட்சியின் பியோனா நாஷ், 'ஒன் நேஷன்' கட்சியின் மால்கம் ராபர்ட்ஸ் மற்றும் செனட் உறுப்பினர்களான 'தி கிரீன்ஸ்' கட்சியின் லாரிஸா வாட்டரஸ் மற்றும் ஸ்காட் லொடியம் ஆகியோர் இதர அரசியல் கட்சித் தலைவர்களாவார்கள். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் இரட்டை குடியுரிமை உள்ள இவர்கள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், எனவே இவர்களது தேர்தல் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அரசியல் சாசன சட்டப் பிரிவு 44-ன் படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய குடியுரிமை மட்டுமே பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும்.   

வழக்கு நடைபெறும் பொழுதே லாரிஸா வாட்டரஸ் மற்றும் ஸ்காட் லொடியம் ஆகியோர் ராஜிநாமா செய்து விட்டதால் மீதமுள்ள மூவரும் உடனடியாக தற்பொழுது பதவி இழப்புக்கு உள்ளாகினர். தற்பொழுது துணை பிரதமர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. செனட் உறுப்பினர் பதவிகள் கட்சியில் உள்ளவர்களால் தேர்வு செய்யப்படும்.

தீர்ப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பர்னபி ஜோய்ஸ் அதில் தெரிவித்துள்ளதாவது:

எனது இரண்டாவது குடியுரிமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதற்காக வாக்காளர்கள் என்னை மன்னிக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பினை மதிக்கிறேன். என் கைவசம் உள்ள நியூசிலாந்து கடவுச்சீட்டினை ஒப்படைத்த பின்னர், மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பர்னபி ஜோய்ஸ் அவரது தாயார் போலவே நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள டம்ஒர்த்தில் பிறந்தவர். ஆனாலும் அவரது தந்தை நியூஸிலாந்திலே பிறந்தவர். ஆனாலும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருந்த அவர் 1947-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறினார். அதற்கு அடுத்த ஆண்டுதான் அங்கு குடியுரிமைக்கான விதிகள் உருவாக்கப்பட்டன. எனவே இதன் காரணமாக ஜோய்ஸின் தந்தையின் குடியுரிமை அவருக்கு பாரம்பரியமாக வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com