ஈரான்: நாட்டு பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஏவுகணைகளை தொடர்ந்து தயாரிப்போம் என்றும் அவ்வாறு தயாரிப்பது சர்வதேச உடன்படிக்கைளை மீறுவதாக கூறுவதை நம்பவில்லை என்று ஈரான் அதிபர் ஹசன் ரகானி தெரிவித்தார்.
அதிபர் ஹசன் ரகானி கூறியதாவது: ‘‘ நாட்டின் பாதுகாப்புக்காக நாங்கள் ஏவுகணை தயாரித்திருக்கிறோம். தயாரித்தும் வருகிறோம். எதிர்காலத்திலும் எங்களுக்கு தேவையான எந்தவொரு ஆயுதத்தையும் தொடர்ந்து தயாரிப்போம். இதில் சர்வதேச விதிமுறைகளை எந்த வகையிலும் நாங்கள் மீறவில்லை என்று பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு உரையில் பேசினார்.
மேலும், சர்வதேச அளவில் ஒப்பு கொண்டுள்ள விதிமுறைகளில் எதையும் மீறாமல் நாங்கள் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார்.
அண்மை காலமாக வடகொரியா அடுத்தடுத்து பல்வேறு ரக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் அதற்கு ஐ.நா.வும், அமெரிக்காவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை கண்டிக்கும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியாவுக்கு கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்து உள்ளது.
இந்நிலையில், ஈரானுக்கும் இத்தகைய தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஈரான் அதிபர் இந்த விளக்கத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2015-ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி வருவதாக அச்சுறுத்தியுள்ளார்.
டிரம்பின் முடிவை கண்டித்து முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜோன் கெர்ரி, "இன்று அதிபர் டிரம்பின் முடிவு ஆபத்தானது, அவர் ஒரு சர்வதேச நெருக்கடியை தோற்றுவித்துள்ளார், இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலன்களையும் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளையும் ஆபத்திற்கு உள்ளாக்குகிறது." என்று தெரிவித்திருந்தார்.