அமெரிக்க வெளியுறவுத் துறையின் மிக முக்கியமான பொறுப்புக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான வழக்குரைஞர் மனீஷா சிங் (45) பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
அதிபராக அவர் பதவியேற்றதை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க வெளியுறவுத் துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான இணை அமைச்சர் சார்லஸ் ரிவ்கின் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அப்போது முதல் அந்த இடம் காலியாக உள்ளது. இந்நிலையில், அந்தப் பதவிக்கு மனீஷா சிங்கின் பெயரை அதிபர் டிரம்ப், செனட் அவைக்கு பரிந்துரைத்துள்ளார். செனட் ஒப்புதலுக்குப் பிறகு அவர் முறைப்படி பதவி ஏற்பார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வசித்துவரும் மனீஷா சிங், உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவர் ஆவார். குழந்தையாக இருக்கும்போதே அவரை அமெரிக்காவுக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுவிட்டனர்.
அங்கேயே வளர்ந்த அவர், சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞரானார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் பொருளாதாரப் பிரிவில் ஏற்கெனவே அவர் முக்கியப் பொறுப்பை வகித்திருக்கிறார்.
தற்போது, எம்.பி. டான் சல்லீவனின் மூத்த கொள்கை ஆலோசகராக மனீஷா பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.