மியான்மரில் ரோஹிங்கயாக்களுக்கு எதிராக அண்மையில் நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து அப்பிரிவைச் சேர்ந்த 40 சதவீதத்தினர் அந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்று ஐ.நா. தெரிவித்தது.
ஐ.நா. பொதுச் செயலரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக மேலும் தெரிவித்தது: மியான்மரின் ரெகினே மாகாணத்திலிருந்து ரோஹிங்கயாக்கள் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். சுமார் 3.89 லட்சம் பேர் மியான்மர் எல்லையைக் கடந்து வங்கதேசம் வந்துள்ளனர் என்று கருதுகிறோம். வியாழக்கிழமை மட்டுமே சுமார் 10,000 பேர் புகலிடம் தேடி வங்கதேசம் வந்துள்ளனர். மியான்மரின் ரெகினே மாகாணத்தில் இருந்த ரோஹிங்கயாக்களில் 40 சதவீதம் பேர் அங்கிருந்து வெளியேறி வங்கதேசம் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்களும் அடங்குவர். புகலிடம் தேடி வருவோரில் 60 சதவீதத்தினர் சிறுவர்கள். அவர்களுக்கு உடனடி உதவியாக, குடிநீர் உள்ளிட்டவற்றை அளிக்க யுனிசெஃப் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம். அகதிகள் முகாம்கள் ஏற்கெனவே நிறைந்து வழிவதால், வெட்ட வெளிகளிலும் சாலையோரங்களிலும் அகதிகள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும். யுனிசெஃப் சார்பாக 70 லட்சம் டாலர் (சுமார் ரூ. 45 கோடி) வழங்கப்படுகிறது என்றார் அவர்.