தென்மேற்கு லண்டனில் உள்ள பார்ஸன் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.20 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 1.50 மணி) குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
சுரங்க ரயிலின் ஒரு பெட்டியில் பெரிய வெள்ளைநிற பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இச்சம்பவத்தால் 30 பயணிகள் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், டோவர் துறைமுகப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் அகமது ஹாசன் என்பவன் முதலில் கைது செய்யப்பட்டான்.
பின்னர், ஹூன்ஸ்லோ பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன், நியூபோர்ட் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய முதலில் கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞன் அகமது ஹாசன் மீது குண்டு வெடிப்பு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஈராக் நாட்டின் அகதியான இவனை லண்டனைச் சேர்ந்த தம்பதி தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
ட்ரையாக்டோன் ட்ரைபெராக்ஸைட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி இந்த குண்டை தயாரித்துள்ளான். ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யும் விதமாக இது வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக சரியாக வெடிக்காததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 17, 25, 30 வயதுடையவர்கள் அனைவருக்கும் சிறைத்தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21, 48 வயதுடைய இருவர் எவ்வித வழக்குமின்றி விடுவிக்கப்பட்டனர்.